| 8.2 புகழ்ச் சோழ நாயனார் புராணம் | 
3947 
குலகிரியின் கொடுமுடிமேல் கொடி வேங்கைக் குறி எழுதி 
நிலவு தரு மதிக்குடைக் கீழ் நெடு நிலம் காத்து இனிது அளிக்கும் 
மலர் புகழ் வண் தமிழ்ச் சோழர் வளநாட்டு மாமூதூர் 
உலகில் வளர் அணிக்கெல்லாம் உள்ளும் உறையூராம் உறையூர். | 
1 | 
3948 
அளவில் பெரும் புகழ் நகரம் அதனில் அணிமணி விளக்கும் 
இள வெயிலின் சுடர்படலை இரவு ஒழிய எறிப்பனவாய்க் 
கிளர் ஒளி சேர் நெடு வானப் பேர் ஆற்றுக் கொடு கெழுவும் 
வளர் ஒளி மாளிகை நிரைகள் மருங்கு உடைய மறுகு எல்லாம். | 
2 | 
3949 
நாக தலத்தும் பிலத்தும் நானிலத்தும் நலம் சிறந்த 
போகம் அனைத்தினுக்கும் உறுப்பாம் பொருவிறந்த வளத்தினவாய் 
மாக நிறைந்திட மலிந்த வரம்பில் பல பொருள் பிறங்கும் 
ஆகரம் ஒத்து அளவில் ஆவண வீதிகள் எல்லாம். | 
3 | 
3950 
பார் நனைய மதம் பொழிந்து பனி விசும்பு கொள முழங்கும் 
போர் முக வெம் கறை அடியும் புடையினம் என்று அடையவரும் 
சோர் மழையின் விடு மதத்துச் சுடரு நெடுமின் ஓடைக் 
கார் முகிலும் பல தெரியா களிற்று நிரைகள் எல்லாம். | 
4 | 
3951 
படுமணியும் பரிச் செருக்கும் ஒலி கிளரப் பயில் புரவி 
நெடு நிரை முன் புல்லுண் வாய் நீர்த் தரங்க நுரை நிவப்ப 
விடு சுடர் மெய் உறை அடுக்கல் முகில் படிய விளங்குதலால் 
தொடு கடல்கள் அனைய பல துரங்க சாலைகள் எல்லாம். | 
5 | 
3952 
துளைக்கை ஐராவதக் களிறும் துரங்க அரசும் திருவும் 
விளைத்த அமுதும் தருவும் விழுமணியும் கொடுபோத 
உளைத்த கடல் இவற்று ஒன்று பெற வேண்டி உம்பரூர் 
வளைத்தது போன்று உளது அங்கண் மதில் சூழ்ந்த மலரக் கிடங்கு. | 
6 | 
3953 
கார் ஏறும் கோபுரங்கள் கதிர் ஏறும் மலர்ச் சோலை 
தேர் ஏறும் அணி வீதி திசை ஏறும் வசையில் அணி 
வார் ஏறும் முலை மடவார் மருங்கு ஏறும் மலர்க்கணை ஒண் 
பார் ஏறும் புகழ் உறந்தைப் பதியின் வளம் பகர் அரிதால். | 
7 | 
3954 
அந் நகரில் பார் அளிக்கும் அடல் அரசர் ஆகின்றார் 
மன்னும் திருத் தில்லை நகர் மணி வீதி அணி விளங்கும் 
சென்னி நீடு அனபாயன் திருக்குலத்து வழி முதல்வோர் 
பொன்னி நதிப் புரவலனார் புகழ் சோழர் எனப் பொலிவார். | 
8 | 
3955 
ஒரு குடைக் கீழ் மண்மகளை உரிமையினில் மணம் புணர்ந்து 
பருவரைத் தோள் வென்றியினால் பார் மன்னர் பணி கேட்ப 
திருமலர்த்தும் பேருலகும் செங்கோலின் முறை நிற்ப 
அருமறைச் சைவம் தழைப்ப அரசு அளிக்கும் அந்நாளில். | 
9 | 
3956 
பிறை வளரும் செம் சடையார் பேணும் சிவ ஆலயம் எல்லாம் 
நிறை பெரும் பூசனை விளங்க நீடு திருத்தொண்டர் தமைக் 
குறை இரந்து வேண்டுவன குறிப்பின் வழி கொடுத்து அருளி 
முறை புரிந்து திருநீற்று முதல் நெறியே பாலிப் பார். | 
10 | 
3957 
அங்கண் இனிது உறையும் நாள் அரசு இறைஞ்ச வீற்று இருந்து 
கொங்கரொடு குட புலத்துக் கோ மன்னர் திறை கொணரத் 
தங்கள் குல மரபின் முதல் தனி நகராம் கருவூரில் 
மங்கல நாள் அரசு உரிமைச் சுற்றம் உடன் வந்து அணைந்தார். | 
11 | 
3958 
வந்து மணி மதில் கருவூர் மருங்கு அணைவார் வானவர் சூழ் 
இந்திரன் வந்து அமரர் புரி எய்துவான் என எய்தி 
சிந்தை களி கூர்ந்து அரனார் மகிழ் திரு ஆன்நிலைக் கோயில் 
முந்துற வந்து இறைஞ்சி மொய் ஒளி மாளிகை புகுந்தார். | 
12 | 
3959 
மாளிகை முன் அத்தாணி மண்டபத்தின் மணிபுனை பொன் 
கோளரி ஆசனத்து இருந்து குட புல மன்னவர் கொணர்ந்த 
ஒளி நெடும் களிற்றின் அணி உலப்பில் பரி துலைக் கனகம் 
நீளிடைவில் விலகு மணி முதல் நிறையும் திறை கண்டார். | 
13 | 
3960 
திறை கொணர்ந்த அரசர்க்குச் செயல் உரிமைத் தொழில் அருளி 
முறை புரியும் தனித் திகரி முறைநில்லா முரண் அரசர் 
உறை அரணம் உளவாகில் தெரிந்து உரைப்பீர் என உணர்வு 
நிறை மதி நீடு அமைச்சர்க்கு மொழிந்து அருளி நிகழும் நாள். | 
14 | 
3961 
சென்று சிவகாமியார் கொணர் திருப்பள்ளித் தாமம் 
அன்று சிதறும் களிற்றை அற எறிந்து பாகரையும் 
கொன்ற எறி பத்தர் எதிர் எனையும் கொன்று அருளும் என 
வென்றி வடிவாள் கொடுத்துத் திருத்தொண்டில் மிகச் சிறந்தார். | 
15 | 
3962 
விளங்கு திரு மதிக் குடைக்கீழ் வீற்று இருந்து பார் அளிக்கும் 
துளங்கொளி நீள் முடியார்க்குத் தொன் முறைமை நெறி அமைச்சர் 
அளந்த திறை முறை கொணரா அரசன் உளன் ஒருவன் என 
உளம் கொள்ளும் வகை உரைப்ப உறுவியப் பால் முறுவலிப்பார். | 
16 | 
3963 
ஆங்கவன் யார் என்று அருள அதிகன் அவன் அணித்தாக 
ஓங்கு எயில் சூழ் மலை அரணத்துள் உறைவான் என உரைப்ப 
ஈங்கு நுமக்கு எதிர் நிற்கும் அரண் உளதோ படை எழுந்த 
பாங்கரணம் துகளாகப் பற்று அறுப்பீர் எனப் பகர்ந்தார். | 
17 | 
3964 
அடல் வளவர் ஆணையினால் அமைச்சர்களும் புறம் போந்து 
கடல் அனைய நெடும் படையைக் கைவகுத்து மேல் செல்வார் 
படர் வனமும் நெடும் கிரியும் பயில் அரணும் பொடி ஆக 
மிடல் உடை நால் கருவியுற வெஞ்சமரம் மிக விளைத்தார். | 
18 | 
3965 
வளவனார் பெரும் சேனை வஞ்சி மலர் மிலைந்து ஏற 
அளவில் அரண் அக்குறும்பில் அதிகர் கோன் அடல் படையும் 
உளம் நிறை வெம் சினம் திருகி உயர் காஞ்சி மிலைந்து ஏறக் 
கிளர் கடல்கள் இரண்டு என்ன இருபடையும் கிடைத்தனவால். | 
19 | 
3966 
கயமொடு கயம் எதிர் குத்தின 
அயமுடன் அயமுனை முட்டின 
வயவரும் வயவரும் உற்றனர் 
வியனமர் வியல் இடம் மிக்கதே. | 
20 | 
3967 
மலையொடு மலைகள் மலைந்தென 
அலை மத அருவி கொழிப்பொடு 
சிலையினர் விசையின் மிசைத் தெரு 
கொலை மதக் கரிகொலை உற்றவே. | 
21 | 
3968 
சூறை மாருதம் ஒத்து எதிர் 
ஏறு பாய் பரி வித்தகர் 
வேறு வேறு தலைப் பெய்து 
சீறி ஆவி செகுத்தனர். | 
22 | 
3969 
மண்டு போரின் மலைப்பவர் 
துண்டம் ஆயிட உற்று எதிர் 
கண்டர் ஆவி கழித்தனர் 
உண்ட சோறு கழிக்கவே. | 
23 | 
3970 
வீடினார் உடலில் பொழி 
நீடுவார் குருதிப் புனல் 
ஓடும் யாறென ஒத்தது 
கோடு போல்வ பிணக் குவை. | 
24 | 
3971 
வானிலாவு கருங்கொடி 
மேனிலாவு பருந்து இனம் 
ஏனை நீள் கழுகின் குலம் 
ஆன ஊணொடு எழுந்தவே. | 
25 | 
3972 
வரிவில் கதை சக்கரம் உற்கரம் வாள் 
சுரிகைப் படை சத்திகழுக் கடைவேல் 
எரி முத்தலை கப்பணமெற் பயில் கோல் 
முரி உற்றன உற்றன மொய்க் களமே. | 
26 | 
3973 
வடிவேல் அதிகன் படைமாள வரைக் 
கடிசூழ் அரணக் கணவாய் நிரவிக் 
கொடி மா மதில் நீடு குறும் பொறையூர் 
முடி நேரியனார் படை முற்றியதே. | 
27 | 
3974 
முற்றும் பொரு சேனை முனை தலையில் 
கற்றிண் புரிசைப் பதி கட்டு அழியப் 
பற்றும் துறை நொச்சிப் பரிந்து உடையச் 
சுற்றும் படை வீரர் துணித்தனரே. | 
28 | 
3975 
மாறுற்ற விறல் படை வாள் அதிகன் 
நூறுற்ற பெரும்படை நூழில் படப் 
பாறுற்ற எயில் பதி பற்று அற விட்டு 
ஏறுற்றனன் ஓடி இருஞ் சுரமே. | 
29 | 
3976 
அதிகன் படை போர் பொருதற்றதலை 
பொதியின் குவை எண்ணில போயின பின் 
நிதியின் குவை மங்கையர் நீள் பரிமா 
எதிரும் கரி பற்றினர் எண்ணிலரே. | 
30 | 
3977 
அரண் முற்றி எறிந்த அமைச்சர்கள் தாம் 
இரணத் தொழில் விட்டு எயில் சூழ் கருவூர் 
முரண் உற்ற சிறப்பொடு முன்னினர் நீள் 
தரணித் தலைவன் கழல் சார் உறவே. | 
31 | 
3978 
மன்னும் கருவூர் நகர் வாயிலின் வாய் 
முன் வந்த கரும் தலை மொய் குவைதான் 
மின்னும் சுடர் மா முடிவேல் வளவன் 
தன் முன்பு கொணர்ந்தனர் தானை உளோர். | 
32 | 
3979 
மண்ணுக்கு உயிராம் எனும் மன்னவனார் 
எண்ணில் பெருகும் தலை யாவையினும் 
நண்ணிக் கொணரும் தலை ஒன்றின் அடுக் 
கண்ணுற்றது ஓர் புன் சடை கண்டனரே. | 
33 | 
3980 
கண்ட பொழுதே நடுங்கி மனம் கலங்கிக் கைதொழுது 
கொண்ட பெரும் பயத்துடனும் குறித்து எதிர் சென்று அது கொணர்ந்த 
திண்டிறலோன் கைத் தலையில் சடை தெரியப் பார்த்து அருளி 
புண்டரிகத் திருக்கண்ணீர் பொழிந்து இழியப் புரவலனார். | 
34 | 
3981 
முரசுடைத்திண் படை கொடு போய் முதல் அமைச்சர் முனை முருக்கி 
உரை சிறக்கும் புகழ்வென்றி ஒன்று ஒழிய ஒன்றாமல் 
திரை சரிந்த கடல் உலகில் திருநீற்றின் நெறி புரந்துயான் 
அரசு அளித்தபடி சால அழகி! தென அழிந்து அயர்வார். | 
35 | 
3982 
தார் தாங்கிக் கடன் முடித்த சடைதாங்கும் சடை முடையார் 
நீர் தாங்கும் சடைப் பெருமான் நெறிதாம் கண்டவரானார் 
சீர் தாங்கும் இவர் வேணிச் சிரம் தாங்கி வரக் கண்டும் 
பார் தாங்க இருந்தேனோ பழிதாங்குவேன் என்றார். | 
36 | 
3983 
என்று அருளிச் செய்து அருளி இதற்கு இசையும் படி துணிவார் 
நின்ற நெறி அமைச்சர்க்கு நீள் நிலம் காத்து அரசு அளித்து 
மன்றில் நடம் புரிவார் தம் வழித் தொண்டின் வழி நிற்ப 
வென்றி முடி என் குமரன்தனைப் புனைவீர் என விதித்தார். | 
37 | 
3984 
அம்மாற்றம் கேட்டு அழியும் அமைச்சரையும் இடர் அதற்றிக் 
கை மாற்றும் செயல்தாமே கடனாற்றும் கருத்து உடையார் 
செம்மார்க்கம் தலை நின்று செந்தீ முன் வளர்ப்பித்துப் 
பொய்ம்மாற்றும் திருநீற்றுப் புனை கோலத்தினில் பொலிந்தார். | 
38 | 
3985 
கண்ட சடைச் சிரத்தினையோர் கனகமணி கலத்து ஏந்தி 
கொண்டு திருமுடித் தாங்கிக் குலவும் எரிவலம் கொள்வார் 
அண்டர் பிரான் திரு நாமத்து அஞ்சு எழுத்தும் எடுத்து ஓதி 
மண்டு தழல் பிழம்பின் இடை மகிழ்ந்து அருளி உள் புக்கார். | 
39 | 
3986 
புக்க பொழுது அலர் மாரி புவி நிறையப் பொழிந்து இழிய 
மிக்க பெரு மங்கல தூரியம் விசும்பின் முழக்கு எடுப்ப 
செக்கர் நெடும் சடை முடியார் சிலம்பு அலம்பு சேவடியின் 
அக்கருணைத் திருநிழல் கீழ் ஆராமை அமர்ந்திருந்தார். | 
40 | 
3987 
முரசங் கொள் கடல் தானை மூவேந்தர் தங்களின் முன் 
பிரசம் கொள் நறுந்தொடையல் புகழ்ச் சோழர் பெருமையினைப் 
பரசும் குற்றேவலினால் அவர் பாதம் பணிந்து ஏத்தி 
நரசிங்க முனையர் திறம் நாம் அறிந்தபடி உரைப்பாம். | 
41 | 
| திருச்சிற்றம்பலம் | 
| 8.3 நரசிங்க முனையரைய நாயனார் புராணம் | 
3988 
கோடாத நெறி விளக்கும் குலமரபின் அரசு அளித்து 
மாடாக மணி கண்டர் திருநீறே மனம் கொள்வார் 
தேடாத பெருவளத்தில் சிறந்த திருமுனைப் பாடி 
நாடாளும் காவலனார் நரசிங்க முனையரையர். | 
1 | 
3989 
இம்முனையர் பெருந்தகையார் இருந்து அரசு புரந்து போய்த் 
தெம் முனைகள் பல கடந்து தீங்கு நெறிப் பாங்கு அகல 
மும்முனை நீள் இலைச் சூல முதல் படையார் தொண்டுபுரி 
அம் முனைவர் அடி அடைவே அரும் பெரும் பேரு என அடைவார். | 
2 | 
3990 
சின விடையார் கோயில் தொறுந் திருச் செல்வம் பெருக்குநெறி 
யனஇடை ஆர் உயிர் துறக்க வரும் எனினும் அவை காத்து 
மனவிடை ஆமைத் தொடையல் அணிமார்பர் வழித்தொண்டு 
கனவிடை ஆகிலும் வழுவாக் கடன் ஆற்றிச் செல்கின்றார். | 
3 | 
3991 
ஆறு அணிந்த சடை முடியார்க்கு ஆதிரை நாள் தொறும் என்றும் 
வேறு நிறை வழிபாடு விளக்கிய பூசனை மேவி 
நீறு அணியும் தொண்டர் அணைந்தார்க்கு எல்லாம் நிகழ் பசும் பொன் 
நூறு குறையாமல் அளித்து இன் அமுது நுகர்விப்பார். | 
4 | 
3992 
ஆன செயல் முறை புரிவார் ஒரு திருவாதிரை நாளில் 
மேன்மை நெறித் தொண்டர்க்கு விளங்கிய பொன் இடும் பொழுதில் 
மான நிலை அழிதன்மை வரும் காமக்குறி மலர்ந்த 
ஊனம் நிகழ் மேனியராய் ஒருவர் நீறு அணிந்து அணைந்தார். | 
5 | 
3993 
மற்று அவர் தம் வடிவு இருந்த படி கண்டு மருங்குள்ளார் 
உற்ற இகழ்ச்சியராகி ஒதுங்குவார் தமைக் கண்டு 
கொற்றவனார் எதிர் சென்று கைகுவித்துக் கொடு போந்தப் 
பெற்றியினார் தமை மிகவும் கொண்டாடிப் பேணுவார். | 
6 | 
3994 
சீலம் இலரே எனினும் திருநீறு சேர்ந்தாரை 
ஞாலம் இகழ்ந்த அருநரகம் நண்ணாமல் எண்ணுவார் 
பாலணைந்தார் தமக்கு அளித்தபடி இரட்டிப் பொன் கொடுத்து 
மேலவரைத் தொழுது இனிய மொழி விளம்பி விடை கொடுத்தார். | 
7 | 
3995 
இவ்வகையே திருத் தொண்டின் அருமை நெறி எந்நாளும் 
செவ்விய அன்பினில் ஆற்றித் திருந்திய சிந்தையர் ஆகிப் 
பை வளர் வாள் அரவு அணிந்தார் பாதமலர் நிழல் சோர்ந்து 
மெய் வகைய வழி அன்பின் மீளாத நிலை பெற்றார். | 
8 | 
3996 
விட நாகம் அணிந்த பிரான் மெய்த்தொண்டு விளைந்த நிலை 
உடனாகும் நரசிங்க முனையர் பிரான் கழல் ஏத்தித் 
தடநாகம் மதம் சொரியத் தனம் சொரியும் கலம் சேரும் 
கடனாகை அதிபத்தர் கடனாகைக் கவின் உரைப்பாம். | 
9 | 
| திருச்சிற்றம்பலம் | 
| 8.4 அதிபத்த நாயனார் புராணம் | 
3997 
மன்னி நீடிய செங்கதிரவன் வழி மரபின் 
தொன்மையாம் முதல் சோழர் தம் திருக்குலத்து உரிமைப் 
பொன்னி நாடு எனும் கற்பகப் பூங்கொடி மலர் போல் 
நன்மை சான்றது நாகப் பட்டினத் திரு நகரம். | 
1 | 
3998 
தாம நித்திலக் கோவைகள் சரிந்திடச் சரிந்த 
தேமலர்க் குழல் மாதர் பந்து ஆடும் தெற்றிகள் சூழ் 
காமர் பொற் சுடர் மாளிகைக் கரும் கடல் முகந்த 
மாமுகில் குலம் மலை என ஏறுவ மருங்கு. | 
2 | 
3999 
பெருமையில் செறி பேரொலி பிறங்கலின் நிறைந்து 
திருமகட்கு வாழ் சேர் இடம் ஆதலில் யாவும் 
தருதலின் கடல் தன்னினும் பெரிது எனத் திரை போல் 
கரி பரித் தொகை மணி துகில் சொரிவதாம் கலத்தால். | 
3 | 
4000 
நீடு தொல் புகழ் நிலம் பதினெட்டினும் நிறைந்த 
பீடு தங்கிய பல பொருள் மாந்தர்கள் பெருகிக் 
கோடி நீள் தனக் குடியுடன் குவலயம் காணும் 
ஆடி மண்டலம் போல்வது அவ்வணி கிளர் மூதூர். | 
4 | 
4001 
அந்நெடும் திரு நகர் மருங்கு அலை கடல் விளிம்பில் 
பன்னெடும் திரை நுரை தவழ் பாங்கரின் ஞாங்கர் 
மன்னும் தொன்மையின் வலை வளத்து உணவினில் மலிந்த 
தன்மை வாழ்குடி மிடைந்தது தட நுளைப் பாடி. | 
5 | 
4002 
புயல் அளப்பன என வலை புறம்பு அணை குரம்பை 
அயல் அளப்பன மீன் விலைப் பசும் பொனின் அடுக்கல் 
வியல் அளக்கரில் விடுந்திமில் வாழ்நர்கள் கொணர்ந்த 
கயல் அளப்பன பரத்தியர் கரு நெடும் கண்கள். | 
6 | 
4003 
உணங்கல் மீன் கவர் உறு நசைக் குருகு உடன் அணைந்த 
கணம் கொள் ஓதிமம் கரும் சினைப் புன்னையங் கானல் 
அணங்கு நுண்ணிடை நுளைச்சியர் அசை நடைக் கழிந்து 
மணம் கொள் கொம்பரின் மருங்கு நின்று இழிய மருளும். | 
7 | 
4004 
வலை நெடும் தொடர் வடம் புடை வலிப்பவர் ஒலியும் 
விலை பகர்ந்து மீன் குவை கொடுப்பவர் விளி ஒலியும் 
தலை சிறந்த வெள் வளை சொரிபவர் தழங்கு ஒலியும் 
அலை நெடுங்கடல் அதிர் ஒலிக்கு எதிர் ஒலி அனைய. | 
8 | 
4005 
அனையதாகிய அந்நுளைப் பாடியில் அமர்ந்து 
மனை வளம் பொலி நுளையர் தம் குலத்தினில் வந்தார் 
புனை இளம் பிறை முடி அவர் அடித்தொண்டு புரியும் 
வினை விளங்கிய அதி பத்தர் என நிகழ் மேலோர். | 
9 | 
4006 
ஆங்கு அன்பர் தாம் நுளையர் தம் தலைவராய் அவர்கள் 
ஏங்கு தெண் திரைக் கடல் இடைப் பலபட இயக்கிப் 
பாங்கு சூழ்வலை வளைத்து மீன் படுத்து முன் குவிக்கும் 
ஓங்கு பல் குவை உலப்பில உடையராய் உயர்வார். | 
10 | 
4007 
முட்டில் மீன் கொலைத் தொழில் வளத்தவர் வலை முகந்து 
பட்ட மீன்களில் ஒரு தலை மீன் படும் தோறும் 
நட்டம் ஆடிய நம்பருக்கு என நளிர் முந்நீர் 
விட்டு வந்தனர் விடாத அன்பு உடன் என்றும் விருப்பால். | 
11 | 
4008 
வாகு சேர் வலை நாள் ஒன்றில் மீன் ஒன்று வரினும் 
ஏக நாயகர் தங்கழற் கென விடும் இயல்பால் 
ஆகும் நாளில் அநேக நாள் அடுத்து ஒரு மீனே 
மேக நீர் படி வேலையில் பட விட்டு வந்தார். | 
12 | 
4009 
மீன் விலைப் பெருகு உணவினில் மிகு பெரும் செல்வம் 
தான் மறுத்தலின் உணவு இன்றி அரும் கிளை சாம்பும் 
பான்மை பற்றியும் வருந்திலர் பட்ட மீன் ஒன்று 
மான் மறிக் கரத்தவர் கழற்கு என விட்டு மகிழ்ந்தார். | 
13 | 
4010 
சால நாள் இப்படி வரத் தாம் உணவு அயர்த்து 
கோல மேனியும் தளரவும் தம் தொழில் குறையாச் 
சீலமே தலை நின்றவர் தம் திறம் தெரிந்தே 
ஆலம் உண்டவர் தொண்டர் அன்பு எனும் அமுது உண்பார். | 
14 | 
4011 
ஆன நாள் ஒன்றில் அவ்வொரு மீனும் அங்கு ஒழித்துத் 
தூ நிறப் பசும் கனக நல் சுடர் நவமணியால் 
மீன் உறுப்பு உற அமைத்து உலகு அடங்கலும் விலையாம் 
பான்மை அற்புதப் படியது ஒன்று இடுவலைப் படுத்தார். | 
15 | 
4012 
வாங்கு நீள் வலை அலைகடல் கரையில் வந்து ஏற 
ஓங்கு செஞ்சுடர் உதித்து என உலகெலாம் வியப்பத் 
தாங்கு பேரொளி தழைத்திடக் காண்டலும் எடுத்துப் 
பாங்கு நின்றவர் மீன் ஒன்று படுத்தனம் என்றார். | 
16 | 
4013 
என்று மற்று உளோர் இயம்பவும் ஏறு சீர்த் தொண்டர் 
பொன் திரள் சுடர் நவமணி பொலிந்தமீன் உறுப்பால் 
ஒன்றும் மற்றிது என்னை ஆள் உடையவர்க்கு ஆகும் 
சென்று பொன் கழல் சேர்க எனத் திரை யொடும் திரிந்தார். | 
17 | 
4014 
அகில லோகமும் பொருள் முதற்றாம் எனும் அளவில் 
புகலும் அப்பெரும் பற்றினைப் புரை அற எறிந்த 
இகலில் மெய்த் திருத் தொண்டர்முன் இறைவர் தாம் விடைமேல் 
முகில் விசும்பிடை அணைந்தார் பொழிந்தனர் முகைப்பூ. | 
18 | 
4015 
பஞ்ச நாதமும் எழுந்தன அதிபத்தர் பணிந்தே 
அஞ்சலிக் கரம் சிரம் மிசை அணைத்து நின்று அவரை 
நஞ்சு வாண்மணி மிடற்று அவர் சிவலோகம் நண்ணித்து 
அஞ்சிறப்புடை அடியர் பாங்கு உறத்தலை அளித்தார். | 
19 | 
4016 
தம் மறம் புரி மரபினில் தகும் பெருந் தொண்டு 
மெய்ம்மையே புரி அதிபத்தர் விளங்கும் தாள் வணங்கி 
மும்மையாகிய புவனங்கள் முறைமையில் போற்றும் 
செம்மை நீதியார் கலிக்கம்பர் திருத்தொண்டு பகர்வாம். | 
20 | 
| திருச்சிற்றம்பலம் | 
| 8.5 கலிக்கம்ப நாயனார் புராணம் | 
4017 
உரிமை ஒழுக்கம் தலை நின்ற உயர் தொல் மரபில் நீடு மனைத் 
தரும நெறியால் வாழ் குடிகள் தழைத்து வனரும் தன்மையதாய் 
வரும் மஞ்சு உறையும் மலர்ச் சோலை மருங்கு சூழ்ந்த வளம் புறவில் 
பெருமை உலகு பெற விளங்கும் மேல் பால் பெண்ணாகட மூதூர். | 
1 | 
4018 
மற்றப் பதியினிடை வாழும் வணிகர் குலத்து வந்து உதித்தார் 
கற்றைச் சடையார் கழற்காதலுடனே வளர்ந்த கருத்து உடையார் 
அற்றைக்கு அன்று தூங்கானை மாடத்து அமர்ந்தார் அடித்தொண்டு 
பற்றிப் பணி செய் கலிக்கம்பர் என்பார் மற்றோர் பற்று இல்லார். | 
2 | 
4019 
ஆன அன்பர் தாம் என்றும் அரனார் அன்பர்க்கு அமுது செய 
மேன்மை விளங்கு போனகமும் விரும்பு கறி நெய் தயிர் தீம் பால் 
தேனின் இனிய கனி கட்டி திருந்த அமுது செய்வித்தே 
ஏனை நிதியம் வேண்டுவன எல்லாம் இன்பமுற அளிப்பார். | 
3 | 
4020 
அன்ன வகையால் திருத்தொண்டு புரியுநாளில் அங்கு ஒரு நாள் 
மன்னும் மனையில் அமுது செய வந்த தொண்டர் தமை எல்லாம் 
தொன்மை முறையே அமுது செயத் தொடங்கு விப்பார் அவர் தம்மை 
முன்னர் அழைத்துத் திருவடிகள் எல்லாம் விளக்க முயல்கின்றார். | 
4 | 
4021 
திருந்து மனையார் மனை எல்லாம் திகழ விளக்கிப் போனகமும் 
பொருந்து சுவையில் கறி அமுதும் புனிதத் தண்ணீர் உடன் மற்றும் 
அருந்தும் இயல்பில் உள்ளனவும் அமைத்துக் கரக நீர் அளிக்க 
விரும்பு கணவர் பெருந்தவத்தாள் எல்லாம் விளக்கும் பொழுதின் கண். | 
5 | 
4022 
முன்பு தமக்குப் பணி செய்யும் தமராய் ஏவல் முனிந்து போய் 
என்பும் அரவும் அணிந்த பிரான் அடியார் ஆகி அங்கு எய்தும் 
அன்பர் உடனே திருவேடம் தாங்கி அணைந்தார் ஒருவர் தாம் 
பின்பு வந்து தோன்ற அவர் பாதம் விளக்கும் பெரும் தகையார். | 
6 | 
4023 
கையால் அவர் தம் அடி பிடிக்கக் காதல் மனையார் முன்பு ஏவல் 
செய்யாது அகன்ற தமர் போலும் என்று தேரும் பொழுது மலர் 
மொய்யார் வாசக் கரக நீர் வார்க்க முட்ட முதல் தொண்டர் 
மையார் கூந்தல் மனையாரைப் பார்த்து மனத்துள் கருதுவார். | 
7 | 
4024 
வெறித்த கொன்றை முடியார் தம் அடியார் இவர் முன் மேவு நிலை 
குறித்து வெள்கி நீர் வாராது ஒழிந்தாள் என்று மனம் கொண்டு 
மறித்து நோக்கார் வடிவாளை வாங்கிக் கரகம் வாங்கிக் கை 
தறித்துக் கரக நீர் எடுத்துத் தாமே அவர் தாள் விளக்கினார். | 
8 | 
4025 
விளக்கி அமுது செய்வதற்கு வேண்டுவன தாமே செய்து 
துளக்கில் சிந்தை உடன் தொண்டர் தம்மை அமுது செய்வித்தார் 
அளப்பில் பெருமை அவர் பின்னும் அடுத்த தொண்டின் வழி நின்று 
களத்தில் நஞ்சம் அணிந்து அவர் தாள்நிழல் கீழ் அடியாருடன் கலந்தார். | 
9 | 
4026 
ஓத மலிநீர் விடம் உண்டார் அடியார் என்றுணரா 
மாதரார் கை தடிந்த கலிக் கம்பர் மலர்ச் சேவடி வணங்கி 
பூத நாதர் திருத்தொண்டு புரிந்து புவனங்களில் பொலிந்த 
காதல் அன்பர் கலிநீதியார் தம் பெருமை கட்டுரைப்பாம். | 
10 | 
| திருச்சிற்றம்பலம் | 
| 8.6 கலிய நாயனார் புராணம் | 
4027 
பேருலகில் ஓங்கு புகழ்ப் பெரும் தொண்டை நன்னாட்டு 
நீருலவும் சடைக் கற்றை நிருத்தர் திருப்பதியாகும் 
காருலவும் மலர்ச் சோலைக் கன்னிமதில் புடை சூழ்ந்து 
தேருலவு நெடு வீதி சிறந்த திருஒற்றியூர். | 
1 | 
4028 
பீடு கெழும் பெரும் தெருவும் புத்தர் உடன் பீலி அமண் 
வேடம் உடையவர் பொருள் போல் ஆகாசவெளி மறைக்கும் 
ஆடு கொடி மணி நெடுமாளிகை நிரைகள் அலை கமுகின் 
காடனைய கடல் படப்பை என விளங்கும் கவின் காட்டும். | 
2 | 
4029 
பன்னு திருப்பதிக இசைப் பாட்டு ஓவா மண்டபங்கள் 
அன்ன நடை மடவார்கள் ஆட்டு ஓவா அணி அரங்கு 
பன் முறை தூரியம் முழங்கு விழவு ஓவா பயில் வீதி 
செம் நெல் அடிசில் பிறங்கல் உணவு ஓவா திருமடங்கள். | 
3 | 
4030 
கெழு மலர் மாதவி புன்னை கிளைஞாழல் தளை அவிழும் 
கொழு முகைய சண்பகங்கள் குளிர் செருந்தி வளர் கைதை 
முழு மணமே முந் நீரும் கமழ மலர் முருகு உயிர்க்கும் 
செழு நிலவின் துகள் அனைய மணல் பரப்பும் திருப்பரப்பு. | 
4 | 
4031 
எயிலணையும் முகில் முழக்கும் எறிதிரை வேலையின் முழக்கும் 
பயில் தரு பல்லிய முழக்கும் முறை தெரியாப் பதி அதனுள் 
வெயில் அணி பல் மணி முதலாம் விழுப்பொருள் ஆவன விளக்கும் 
தயில வினைத் தொழில் மரபில் சக்கரப் பாடி தெருவு. | 
5 | 
4032 
அக்குலத்தின் செய்தவத்தால் அவனி மிசை அவதரித்தார் 
மிக்க பெரும் செல்வத்து மீக்கூர விளங்கினார் 
தக்க புகழ்க் கலியனார் எனும் நாமம் தலை நின்றார் 
முக்கண் இறைவர்க்கு உரிமைத் திருத் தொண்டின் நெறி முயல்வார். | 
6 | 
4033 
எல்லையில் பல் கோடி தனத்து இறைவராய் இப்படித்தாம் 
செல்வ நெறிப் பயன் அறிந்து திருஒற்றியூர் அமர்ந்த 
கொல்லை மழவிடையார் தம் கோயிலின் உள்ளும் புறம்பும் 
அல்லும் நெடும் பகலும் இடும் திருவிளக்கின் அணி விளைத்தார். | 
7 | 
4034 
எண்ணில் திரு விளக்கு நெடு நாள் எல்லாம் எரித்து வரப் 
புண்ணிய மெய்த் தொண்டர் செயல் புலப்படுப்பார் அருளாலே 
உண்ணிறையும் பெரும் செல்வம் உயர்த்தும் வினைச் செயல் ஓவி 
மண்ணில் அவர் இருவினை போல் மாண்ட மாட்சிமைத்தாக. | 
8 | 
4035 
திருமலி செல்வத்துழனி தேய்ந்து அழிந்த பின்னையுந்தம் 
பெருமை நிலைத் திருப் பணியில் பேராத பேராளர் 
வருமரபில் உள்ளோர் பால் எண்ணெய் மாறிக் கொணர்ந்து 
தரும் இயல்பில் கூலியினால் தமது திருப்பணி செய்வார். | 
9 | 
4036 
வளம் உடையார் பால் எண்ணெய் கொடுபோய் மாறிக் கூலி 
கொள முயலும் செய்கையும் மற்று அவர் கொடாமையின் மாறத் 
தளருமனம் உடையவர் தாம் சக்கர எந்திரம் புரியும் 
களனில் வரும் பணி செய்து பெரும் கூலி காதலித்தார். | 
10 | 
4037 
செக்கு நிறை எள் ஆட்டிப் பதம் அறிந்து தில தயிலம் 
பக்கம் எழ மிக உழந்தும் பாண்டில் வரும் எருது உய்த்தும் 
தக்க தொழில் பெறும் கூலி தாம் கொண்டு தாழாமை 
மிக்க திரு விளக்கு இட்டார் விழுத்தொண்டு விளக்கிட்டார். | 
11 | 
4038 
அப் பணியால் வரும் பேறு அவ் வினைஞர் பலர் உளராய் 
எப்பரிசும் கிடையாத வகை முட்ட இடர் உழந்தே 
ஒப்பில் மனை விற்று எரிக்கும் உறு பொருளும் மாண்ட அதன் பின் 
செப்பருஞ் சீர் மனையாரை விற்பதற்குத் தேடுவார். | 
12 | 
4039 
மனம் மகிழ்ந்து மனைவியார் தமைக் கொண்டு வள நகரில் 
தனம் அளிப்பார் தமை எங்கும் கிடையாமல் தளர்வு எய்தி 
சின விடையார் திருக் கோயில் திரு விளக்குப் பணிமுட்டக் 
கன வினும் முன்பு அறியாதார் கை அறவால் எய்தினார். | 
13 | 
4040 
பணி கொள்ளும் படம் பக்க நாயகர்தம் கோயிலினுள் 
அணி கொள்ளும் திருவிளக்குப் பணிமாறும் அமையத்தில் 
மணி வண்ணச் சுடர் விளக்கு மாளில் யான் மாள்வன் எனத் 
துணிவுள்ளங் கொள நினைந்து அவ் வினை முடிக்கத் தொடங்குவார். | 
14 | 
4041 
திரு விளக்குத் திரி இட்டு அங்கு அகல் பரப்பிச் செயல் நிரம்ப 
ஒருவிய எண் ணெய்க்கு ஈடா உடல் உதிரம் கொடுநிறைக்கக் 
கருவியினால் மிடறு அரிய அக்கையைக் கண் நுதலார் 
பெருகு திருக் கருணையுடன் நேர்வந்து பிடித்து அருளி. | 
15 | 
4042 
மற்றவர் தம் முன் ஆக மழ விடை மேல் எழுந்து அருள 
உற்றவூறு அது நீங்கி ஒளி விளங்க உச்சியின் மேல் 
பற்றிய அஞ்சலியினர் ஆய் நின்றவரைப் பரமர் தாம் 
பொற்புடைய சிவபுரியில் பொலிந்து இருக்க அருள் புரிந்தார். | 
16 | 
4043 
தேவர் பிரான் திருவிளக்குச் செயல் முட்ட மிடறு அரிந்து 
மே வரிய வினை முடித்தார் கழல் வணங்கி வியன் உலகில் 
யாவர் எனாது அரன் அடியார் தமை இகழ்ந்து பேசினரை 
நாவரியும் சத்தியார் திருத்தொண்டின் நலம் உரைப்பாம். | 
17 | 
| திருச்சிற்றம்பலம் | 
| 8.8 ஐயடிகள் காடவர்கோன் நாயனார் புராணம் | 
4051 
வைய நிகழ் பல்லவர் தம் குலமரபின் வழித்தோன்றி 
வெய்ய கலியும் பகையும் மிகை ஒழியும் வகை அடக்கிச் 
செய்ய சடையார் சைவத் திரு நெறியால் அரசு அளிப்பார் 
ஐயடிகள் நீதியால் அடிப்படுத்தும் செங்கோலார். | 
1 | 
4052 
திருமலியும் புகழ் விளங்கச் சேணிலத்தில் எவ்வுயிரும் 
பெருமையுடன் இனிது அமரப் பிற புலங்கள் அடிப்படுத்துப் 
தருமநெறி தழைத்து ஓங்கத் தாரணிமேல் சைவமுடன் 
அருமறையின் துறை விளங்க அரசு அளிக்கும் அந்நாளில். | 
2 | 
4053 
மன்னவரும் பணி செய்ய வடநூல் தென்தமிழ் முதலாம் 
பன்னு கலைப் பணிசெய்யப் பார் அளிப்பார் அரசாட்சி 
இன்னல் என இகழ்ந்து அதனை எழில் குமரன் மேல் இழச்சி 
நன்மை நெறித் திருத்தொண்டு நயந்து அளிப்பார் ஆயினார். | 
3 | 
4054 
தொண்டுரிமை புரக்கின்றார் சூழ்வேலை உலகின் கண் 
அண்டர் பிரான் அமர்ந்து அருளும் ஆலயங்களான எலாம் 
கண்டிறைஞ்சித் திருத்தொண்டின் கடன் ஏற்ற பணி செய்த 
வண் தமிழின் மொழி வெண்பா ஓரொன்றா வழுத்துவார். | 
4 | 
4055 
பெருத்தெழு காதலினால் வணங்கிப் பெரும்பற்றத் தண்புலியூர்த் 
திருச்சிற்றம் பலத்து ஆடல் புரிந்து அருளும் செய்ய சடை 
நிறுத்தனார் திருக்கூத்து நேர்ந்து இறைஞ்சி நெடுந்தகையார் 
விருப்பின் உடன் செந்தமிழின் வெண்பா மென் மலர் புனைந்தார். | 
5 | 
4056 
அவ்வகையால் அருள் பெற்று அங்கு அமர்ந்து சில நாள் வைகி 
இவ் உலகில் தம் பெருமான் கோயில்கள் எல்லாம் எய்திச் 
செவ்விய அன்பொடு பணிந்து திருப்பணி ஏற்றன செய்தே 
எவ்வுலகும் புகழ்ந்து ஏத்தும் இன்தமிழ் வெண்பா மொழிந்தார். | 
6 | 
4057 
இந்நெறியால் அரன் அடியார் இன்பமுற இசைந்த பணி 
பன்னெடு நாள் ஆற்றியபின் பரமர் திருவடி நிழல் கீழ் 
மன்னு சிவலோகத்து வழி அன்பர் மருங்கு அணைந்தார் 
கன்னிமதில் சூழ் காஞ்சிக் காடவரை அடிகளார். | 
7 | 
4058 
பையரவ மணியாரம் அணிந்தார்க்குப் பாவணிந்த 
ஐயடிகள் காடவனார் அடி இணைத்தாமரை வணங்கிக் 
கையணிமான் மழு உடையார் கழல் பணி சிந்தனை உடைய 
செய்தவத்துக் கணம் புல்லர் திருத்தொண்டு விரித்து உரைப்பாம். | 
8 | 
| சுந்தரமூர்த்தி சுவாமிகள் துதி | 
4059 
உளத்தில் ஒரு துளக்கம் இலேம் உலகு உய்ய இருண்ட திருக் 
களத்தர் முது குன்றர் தரு கனகம் ஆற்றில் இட்டு 
வளத்தின் மலி ஏழ் உலகும் வணங்கு பெரும் திருவாரூர்க் 
குளத்தில் எடுத்தார் வினையின் குழிவாய் நின்று எனை எடுத்தார். | 
9 | 
| திருச்சிற்றம்பலம் | 
| பொய்யடிமையில்லாத புலவர் சருக்கம் முற்றிற்று. |